சினிமா சூழ் உலகு - பகுதி 5

காலக் காலின் ஞெகிழமே - 5

“குறுங் கவிதையைப் போலே
நீ முடிந்து விடாதே
ஒரு முடிவிலி இசையினில்
தினம் தினம் கரைந்திடு அசுணமே!” என்று பெண் பாடுகின்றாள்.

குறுங்கவிதையை போல நீ முடிந்துவிடாதே என்கின்றாள். இருந்தாலும் சில குறுங்கவிதைகள் வாசித்த பிறகு மனத்துள் அவை ஏற்படுத்திய உணர்வு நெடுங்காலம் நிலைத்திருக்குமல்லவா. சரி, அதை விட்டுவிடலாம்.

குறுங்கவிதை என்னும் பொழுது ஹைக்கூ, குறும்பா மற்றும் சில மரபு வடிவங்களைப் பற்றிச் சொல்லலாம். அவை பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் (பார்க்கலாமா?)

முடிவிலி இசையினில் தினம் தினம் கரைந்திடு அசுணமே.
***

இதில் குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் எனப்படுவது இசையறியக் கூடிய (இசையை ரசிக்கக்கூடிய) ஒரு விலங்கு. இதைச் சில உரைகாரர்கள் பறவை என்றும் கூறியிருக்கிறார்களாம். 
ஆனால் அசுணமா (அசுணம் + மா) என்று சில பாடல்களில் வருவதால் இதை விலங்கு என்போம் (மா - மிருகம்).

இப்படிப்பட்ட ஒரு விலங்கைப் பற்றித் தகவல்கள் இல்லையாதலின் கற்பனை விலங்கெனக் கருத இடமுண்டு. இருப்பினும் சங்கத் தமிழில் அசுணம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதால் அவ்விலங்கு இருந்திருக்கின்றது எனக்கொள்ளலாம்.

(காணக்கிடைக்காத விலங்குகளின் இருத்தல் தொடர்பான கற்கை crypto zoology பற்றியும், அழிந்து போய்விட்ட விலங்குகள் தொடர்பான கற்கை paleozoology பற்றியும் பேசலாம், பதிவு நீளக்கூடும் என்பதால் தவிர்க்கின்றேன். இதையும் வேறொரு பதிவில் பார்ப்போம்.)

நாம் ரசிக்கும் சில விடயங்களே நம் அழிவுக்கு காரணமாகி விடுகின்றன. அதே நிலைதான் அசுணமாவிற்கும்.

அது ரசிக்கும் இசையே அதன் அழிவிற்கு வழிகோலியது. எப்படி?

தொடரும்...

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.20

Comments