காளி யென்னும் போழ்தில்...



சோக மேது முண்டோ - காளி
சூலந் தோன்றும் போழ்தில்
யாக மேதும் செய்யேன் - காளி
யன்னை நாமஞ் சொல்வேன்
மேக மூட்டம் போலே - என்னை
மேய்க்க வெண்ணுந் தீமை
போகச் செய்வ ளன்னை - யானும்
பொய்மை நீங்கி வாழ்வேன்

சித்த ருக்கு மன்னை - வாழுஞ்
சிற்று யிர்க்கு மன்னை
பித்த ருக்கு மன்னை - காளி
பேற ருள்வள் காணீர்
சத்த மாகி நிற்பாள் - உள்ளில்
தங்கு மோன மாவாள்
நித்த நித்தம் போற்றீர் - அந்த
நீலி பாதம் தஞ்சம்!

பாட்டுப் பாட வைத்தே - அந்தப்
பாட்டு திப்பள் பாதம்
காட்டுங் கோலம் யாவும் - என்றன்
கண்க ளுக்கு ளின்பம்!
போட்டு டைத்த பாண்டம் - போலப்
போகும் வாழ்க்கை தன்னை
ஆட்டு விக்கும் நூலும் - காளி
அன்னை கையி லுண்டே!
(தொடரும்...)

நிறோஷ் ஞானச்செல்வம்

Comments